சென்னை: பிரிட்ஜ் இல்லாதவர்கள், பிரிட்ஜ் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது சவாலான காரியமாகவே இருந்து வருகிறது. என்ன செய்தாலும் மாவு ஓரிரு நாட்கள் தான் புளிக்காமல் இருக்கும்.
பிறகு புளிக்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு இல்லாமல் ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
முதலில் மாவு ஆட்டும் கிரைண்டரை நன்றாக கைவைத்து கழுவ வேண்டும். ஏனென்றால் நீங்கள் கடைசியாக ஆட்டி வைத்த அந்த மாவின் புளிப்பு தன்மை அதில் இருக்கும் அதனால் தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். குறைந்தது அரிசியை 3 லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டும். அதற்கு மாறாக சிலர், இரவு முழுவதும் ஊற வைத்துவிடுவார்கள். பின்னர் காலையில் மாவை அரைக்கிறார்கள். அப்படி செய்தால் விரைவாக புளித்து விட அதிக வாய்ப்புள்ளது.
உளுந்தை இட்லிக்கு ஊற வைக்கும்போது 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் நீண்ட நேரமாக மாவை ஆட்டி கொண்டிருக்கக் கூடாது. 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் உளுந்து புசுபுசுவென பொங்கி வரும் போது மாவை அள்ளிவிட வேண்டும். இதேபோலத்தான் அரிசியையும் நீண்ட நேரம் கிரைண்டரில் ஓட விடக்கூடாது.
முக்கியமாக கிரைண்டரில் உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாகத்தான் போட்டு அரைக்க வேண்டும். சேர்த்து அரைக்கக் கூடாது. உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் தனி டப்பாவில் மாற்றும் போது, கை படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரண்டு மாவையும் கையை போட்டு கரைக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு கரண்டியை வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். ஏனெனில், கையைப் போட்டு கரைக்கும் போது, கை சூடு பட்டு மாவு சீக்கிரம் புளித்து விடும் வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக அதில் உப்பு போட்டு கரைக்கக் கூடாது. உப்பு போடாமல் மூடி வைத்துவிட்டால் குறைவாகவே மாவு புளித்து வரும். பாத்திரத்தில் அடியில் இரண்டு வெற்றிலையை காம்புடன் வைத்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி வைத்தாலும் இரண்டு நாளைக்கு அப்படியே புதிய மாவு மாதிரி புளிக்காமல் இருக்கும்.
தென்மாவட்டங்களில் இன்றும் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் ஆட்டிய மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே மாவு பாத்திரத்தை வைப்பார்கள். அப்படி செய்தால் சீக்கிரமாக புளிக்காது.