வட மாநிலங்களில் தீவிரமடைந்து வரும் பருவமழை
டெல்லி: வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் கனமழை காரணமாக மழை பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.