நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்… உ.பி. மந்திரி பேச்சு
ஜெய்ப்பூர்: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அரசில் ரகுராஜ் சிங் அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு நடத்திய கேசரியா மகாபஞ்சாயத் என்ற நிகழ்ச்சியில் ரகுராஜ் சிங் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. நமது இளைஞர்கள் 2 குழந்தைகளுக்கு பதிலாக 4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளை உங்களால் வளர்க்கவும் பராமரிக்கவும் முடியாவிட்டால் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அவர்களை வளர்க்கிறோம் என்று பேசியுள்ளார்.
இந்திய மக்கள் பல்வேறு கடந்த கால தவறுகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக உள்ளனர். இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அவர் கூட்டத்தினரை வலியுறுத்தினார்.
நமது பலத்தை மீண்டும் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பாடம் கற்பித்துள்ளோம். ஜெய்ப்பூரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ஒரு செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் நிறுவப்பட்ட ராமராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.