திருப்பதி: கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தங்கும் அறைகள், முழுமையாக பக்தர்களால் நிரம்பி வழிந்தன.

கிருஷ்ண தேஜா வட்டத்திலிருந்து சீலாதோரணம் வட்டம் வரை 5 கிலோமீட்டர் வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. இதனால் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்களும் 4 முதல் 5 மணி நேரத்திற்குப் பிறகு தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஸ்ரீவாரி கோவில் பகுதி, மாடவீதி, அறை ஒதுக்கீட்டு அலுவலகங்கள், சி.ஆர்.ஓ., ஆர்.டி.சி., பஸ் நிலையம், அன்னபிரசாத மண்டபம், அகிலாண்டம், லட்டு வளாகம், ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அறைகள் கிடைக்காத பக்தர்கள் அலுவலகங்கள், விடுதி வளாகங்கள், மரத்தடிகள் மற்றும் நடைபாதைகளில் ஓய்வெடுக்கின்றனர். திருமலையில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களான ஸ்ரீவாரி பாதம் மற்றும் பாபவிநாசம் ஆகியவையும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. இன்றும், நாளையும் இதே போல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 74,374 பேர் தரிசனம் செய்தனர். 37,477 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.3.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.