ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முல்லை நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திரா காந்தி (54). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
முல்லைநகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிரம்பியிருக்கிறதா என்று பார்க்க மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திராகாந்தி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ வண்டு கடித்து கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.