பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து இந்தியாவை குறிவைத்து திட்டமிடத் தொடங்கியிருந்தன. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறிவைத்த தாக்குதலை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது.

இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலுக்கு மீண்டும் இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இதன் பின்னணியில் பாகிஸ்தானுக்கு சீனா மற்றும் துருக்கி நாடுகள் வெளிப்படையாக ஆதரவாக நின்றன. சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார ஆதரவு பாகிஸ்தானுக்கு பெரும் உதவியாக இருந்தது, அதேபோல் துருக்கியும் தன்னுடைய ஆதரவை செயல்முறை ரீதியாக வழங்கியது.
இந்த மூன்று நாடுகளும் இந்தியாவின் பொருளாதாரம், புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றன. பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து வந்த ஆயுதங்களில் “சீனாவில் தயாரிக்கப்பட்டது” என்ற அடையாளம் இருந்தது. இது சீனாவின் நேரடி ஈடுபாட்டை உணர்த்தியது.
CPEC திட்டத்தின் மூலம் பாகிஸ்தானில் பெரியளவில் முதலீடு செய்துள்ள சீனா, துருக்கிக்கும் ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்காக உதவியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்திய பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீர் இருவரும் துருக்கிக்கு சென்று அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்தனர்.
துருக்கி தனது “Asia Anew Initiative” திட்டத்தின் கீழ் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுடன் துருக்கி நடத்திய கூட்டு ராணுவ பயிற்சிகள் இந்த உறவை மேலும் உறுதி செய்துள்ளன.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் துருக்கியின் போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.
போர் நிறைவடைந்த பின்பு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு நன்றி கூற சென்று, பிரதமர் துருக்கிக்கு சென்றது. இது மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிரான ஒரு கூட்டணியாக செயல்படுவதை தெளிவாக காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியா துருக்கியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மேற்கு ஆசிய நாடுகளான ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தி துருக்கியின் புவிசார் செல்வாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் கிரீஸ், சைப்ரஸ் மற்றும் குர்திஷ் குழுக்களுடன் கூட்டணி மேற்கொள்வது துருக்கிக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக அமையும். SCO மற்றும் BRICS Plus அமைப்புகளில் துருக்கியின் வருகையை இந்தியா தடுக்க வேண்டும்.
இந்த மூன்று நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு புதிய சவால்களைக் கொண்டு வந்தாலும், சரியான உள்நோக்கிய மற்றும் வெளிநோக்கிய நடவடிக்கைகளின் மூலம் இந்தியா தனது பாதுகாப்பையும், செல்வாக்கையும் உறுதிப்படுத்த முடியும்.