ஒட்டாவாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். பகவத் கீதை மீது கை வைத்து பதவிப் பிரமாணம் செய்ததன் மூலம், தன்னுடைய பாரம்பரியத்தை மரியாதையுடன் வெளிப்படுத்தினார்.கனடா பார்லிமென்ட் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்ந்தது.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அனிதா ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தாய் பஞ்சாபைச் சேர்ந்தவரும் ஆவர்.அனிதாவின் தாத்தா சுதந்திரப் போராளி வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். இவர் கோவை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். தந்தை பொது அறுவை சிகிச்சை நிபுணரும், தாய் மயக்க மருந்து நிபுணரும் ஆவார்.
அனிதா ஆனந்த் 2019ல் ஆக்வில்லா தொகுதியில் வென்று அரசியலில் அடியெடுத்து வைத்தார். பின்னர் போக்குவரத்து துறையில் அமைச்சர் பணியாற்றினார். 2021ல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவியேற்று, உக்ரைன் போரில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அனிதா, குயீன்ஸ், ஆக்ஸ்போர்ட், டல்ஹவுசி மற்றும் டொரன்டோ பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் சட்டம் தொடர்பான படிப்புகளை முடித்துள்ளார்.
கடந்த காலங்களில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் என வதந்திகள் இருந்தாலும், அவர் அது குறித்து மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது பெருமையாகும்.அனிதாவின் பதவியேற்பு நிகழ்வில் பகவத் கீதையின் முன்னிலையில் சத்தியம் செய்தது, கனடாவில் இந்தியர்களின் மரபைத் தூக்கிப் பிடிக்கிறது. இந்த நிகழ்வு இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.