வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ், ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி ஜனவரி 15-ம் தேதி சந்திரனுக்கு ‘ப்ளூ கோஸ்ட்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. இது பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் ஒரு மாதம் பயணித்தது. பின்னர் அது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. 16 நாள் பயணத்துக்குப் பிறகு நேற்று (அமெரிக்க நேரப்படி) அதிகாலை 3.34 மணிக்கு நிலவின் மாரே கிரிசியூம் பகுதியில் ப்ளூ கோஸ்ட் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள பணி கட்டுப்பாட்டு மையத்தின் பொறியாளர் இதை உறுதிப்படுத்தினார். இந்த சாதனையை எட்டிய இரண்டாவது தனியார் திட்டம் இதுவாகும். நிலவில் கால் பதித்த விண்கலம், நிலவின் மேற்பரப்பின் படங்களை அனுப்பியுள்ளது. அதன் தடம் அதில் பதிவாகியுள்ளது. இந்த விண்கலத்தில் மண் பகுப்பாய்வி மற்றும் கதிர்வீச்சைத் தாங்கும் கணினி உட்பட 10 கருவிகள் உள்ளன.
விண்கலம் ஒரு முழு சந்திர நாளுக்கு (14 பூமி நாட்கள்) செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 14 அன்று பூமி சூரியனின் ஒளியைத் தடுக்கும் போது உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இதற்கான செலவை குறைக்க அமெரிக்க தேசிய விண்வெளி நிறுவனம் (நாசா) தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.