அமெரிக்காவில் சீன ஆய்வாளர்கள் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சையை கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துடன் தொடர்பாக அமெரிக்கா கவனமாக இருக்காவிட்டால், கொரோனாவை விட மோசமான ஒன்றை சந்திக்க நேரிடும் என முன்னணி நிபுணர் கார்டன் ஜி சாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் யுன்கிங் ஜியான் (33) மற்றும் அவரது காதலன் சுன்யோங் லியு (34) ஆகியோர், ‘ஃபியூசேரியம் கிராமினியாரம்’ என்ற பூஞ்சையை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற முக்கியமான விவசாய பயிர்களை முற்றாக அழிக்கும் தன்மை கொண்டது.

அமேரிக்க அதிகாரிகள் இந்த பூஞ்சையை விவசாய பயங்கரவாத ஆயுதமாகவே வகைப்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் இது காரணமாக அமெரிக்க விவசாயத்தில் பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட இழப்புகள் ஏற்படுகின்றன. மட்டுமல்லாமல், இது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் கல்லீரல் பாதிப்பு மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு.
கைது செய்யப்பட்ட ஜியான் மற்றும் லியு, சீனாவில் இந்த பூஞ்சையைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், இதுவே அவர்களது நடவடிக்கையின் பின்னணியாயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையின் போது, சீன விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற கார்டன் ஜி சாங், அமெரிக்கா இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கொரோனாவை விட மோசமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
ஜி சாங் மேலும் தெரிவித்ததாவது, 2019ம் ஆண்டு சீனாவின் அதிகாரபூர்வ நாளேட்டில் அமெரிக்காவுக்கு எதிராக போரை முன்னிட்டு வெளிவந்த கட்டுரை ஒன்றை நினைவூட்டும் வகையில், இப்போது பூஞ்சை கடத்தல் வழக்கும் சீரிய சிக்னலாக பார்க்கப்பட வேண்டியது.
அவர், சீன தலைவர் ஜி ஜின்பிங் தொடர்ந்து போரின் தேவையை வலியுறுத்தி வருவதாகவும், சீன சமுதாயத்தைப் போர் மனப்பாங்கிற்கு தயார்படுத்துவதாகவும் விமர்சித்தார். கடந்த 2020ல் ஆர்டர் செய்யாமல் சீனாவிலிருந்து விதைகள் அனுப்பப்பட்ட சம்பவமும், தற்போதைய பூஞ்சை கடத்தல் முயற்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
சீனாவின் ஆன்லைன் நிறுவனமான ‘டிமு’ வழியாகவும் இதுபோன்ற விதைகள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதோடு, இது திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்பதும் சாஙின் கூற்று.
அமெரிக்கா தொடர்ந்து சீனாவுடன் உறவை பேணுவது, எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறும் என்றும், இதைத் தடுப்பதற்கான ஒரே வழி சீனாவுடன் உறவை துண்டிப்பதே என அவர் வலியுறுத்தினார்.
இப்போது பூஞ்சை கடத்தலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாங் வெளியிட்ட எச்சரிக்கை அமெரிக்க அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம், கொரோனாவை விட மோசமான உயிரிழப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.