சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது.
இந்தப் போரில் இலங்கையில் இருந்த தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மே 18 அன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.
இன்று முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு தினம். இதை ஒட்டமி மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் , ரெலோ கட்சியின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.