பிரதமர் நரேந்திர மோடி 2016 மற்றும் 2019-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக ஏப்ரல் 22-ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2023-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான நட்புறவு தொடர்கிறது. அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து வலுவான உறவுகளை கொண்டுள்ளன. இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:- இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட (ஐஎம்இசி) திட்டம், 2023-ல் டில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம். இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. IMEC பாதை 6,000 கிமீ நீளம் கொண்டது. இதில் 3,500 கி.மீ கடல் பாதை.
இத்திட்டத்தின்படி, இந்தியாவில் மும்பை, ஜெபல் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் குவைன், ஹரத், ரியாத், சவுதி அரேபியாவின் அல் ஹுதைதா, இஸ்ரேலின் ஹைஃபா, கிரீஸில் உள்ள பைரேஸ் ஆகிய நகரங்கள் கடல், சாலை, ரயில் மூலம் இணைக்கப்பட உள்ளன. தற்போது, இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய 36 நாட்கள் ஆகிறது. ஐஎம்இசி வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால், 14 நாட்களில் இந்திய சரக்கு ஜெர்மனியை சென்றடையும். புதிய வழித்தடத்தால் சர்வதேச போக்குவரத்து செலவு 30 சதவீதம் குறையும்.
சரக்கு கப்பல்களின் பயண நேரம் 40 சதவீதம் வரை குறைக்கப்படும். மேலும், ஐஎம்இசி வழித்தடத்தின் இருபுறமும் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். ஹைட்ரஜன் மற்றும் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் அமைக்கப்படும். சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்டம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் மேம்படுத்தும்.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் காரணமாக IMEC பொருளாதார வழித்தட திட்டம் தாமதமானது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ஐஎம்இசி திட்டம் மிக அவசரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் பிரான்ஸ் சென்றார். அப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஐஎம்இசி திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐஎம்இசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா பயணம் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் ஆகியோர் IMEC பொருளாதார வழித்தட திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சவுதி அரேபியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.