உலக நாடுகள் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்த வரிசையில், ஃபிரான்ஸ் அரசு ஒரு பெரிய முடிவை எடுத்து வருகிறது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல், மக்கள் அதிகம் கூடும் வெளிப்புற இடங்களில் சிகரெட் புகைபிடிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிகரெட் புகைபிடிப்பது, அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ளவர்களுக்கும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகை நுரையீரல், இதயம் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த காரணங்களுக்காகவே, குழந்தைகள் அடிக்கடி செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற அனைத்து முக்கிய வெளிப்புற இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தகவலை, பிரான்ஸ் நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது வார்த்தைகளில், “சுத்தமான காற்றை சுவாசிக்கக் கூடிய குழந்தையின் உரிமை எங்கு தொடங்குகிறதோ, அங்குதான் ஒருவரின் புகைபிடிக்கும் சுதந்திரம் முடிகிறது.” எனவே, இந்த புதிய சட்டம், சிறுவர்கள் அதிகம் வரும் இடங்களில் புகையிலையை முற்றிலுமாக ஒழிக்கவே உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 35 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,000 வரை) அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், கஃபே மொட்டைமாடிகளுக்கு புகைபிடிக்கும் தடை விதிக்கப்படாது. மேலும், இந்த தடை எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் மீது பொருந்தாது; அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது.
பிரான்ஸில் புகையிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 பேர் மரணம் அடைகின்றனர். சமீபத்திய கருத்துக்கணிப்பில், பிரெஞ்சு மக்களில் 62 சதவீதம் பேர் இந்த தடை நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். இது, மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

இதனுடன், French Observatory of Drugs and Addictive Behaviours நடத்திய ஆய்வின் அடிப்படையில், 17 வயது இளைஞர்களிடம் தினசரி புகைபிடிக்கும் பழக்கம் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 15.9 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. ஆனால் வேப்பிங் சாதனங்கள் பிரபலமடைந்துள்ளன. அதே ஆய்வில், 17 வயதுடைய இளைஞர்களில் 56.9 சதவீதம் பேர் இதை முயற்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படும் இந்த தீர்மானம், மக்கள் நலன் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் ஆரோக்கியத்திற்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதியின் மூலம், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.