அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த 53 வயது பெண்ணுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு நான்கு மாதங்கள் இயல்பாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து இந்தப் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் நீக்கினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயதுப் பெண்ணான Towana Looney இரண்டு சிறுநீரகங்களையும் இழந்ததால் கடந்த 2016 முதல் டயாலிசிஸ் சிகிச்சையின் மூலம் உயிர்வாழ்ந்து வருகிறார்.
ஆனால் நீண்டகாலம் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டதால் அவருக்கு வேறு சில தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவிர்க்க முடியாத சூழல்களில் பன்றி உள்ளிட்ட விலங்குகளின் சிறுநீரகத்தைப் பொருத்துவது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடித்ததில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பரில் லூனிக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. பன்றியின் சிறுநீரகத்துடன் நான்கு மாதங்கள் இயல்பாக வாழ்ந்த லூனிக்கு மீண்டும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து லூனிக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் நீக்கினர். இப்போது லூனிக்கு மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.