டெல்லி: 2020 மற்றும் 2024-ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், அமெரிக்காவிடமிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்ததாக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் பலர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதானி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை கிரிமினல் வழக்கைத் தாக்கல் செய்த நிலையில், அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் இரண்டு சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவை அனைத்தையும் ஒற்றை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி.கராஃபிஸ் விசாரிப்பார் என்றும், அனைத்து வழக்குகளையும் தனித்தனியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணையில் இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நேற்று தெரிவித்தது. மேலும் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோரிடம் விசாரணையை தொடர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆணையம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி கிரீன் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளதுடன், சாத்தியமான அனைத்து சட்ட உதவிகளையும் நாடுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.