ஜெருசலேம்: ஈரானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதல் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்கும் நிலையில், அங்கு மக்கள் பெரும் அவசர சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது எங்கள் “உயிர்வாழ்விற்கான போராட்டம்” எனக் கூறி, ராணுவ நடவடிக்கையை முற்றாக நியாயப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் அரசால் “Operation Rising Lion” எனப் பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம், ஈரான் உருவாக்கி வரும் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். அவரது பேச்சின் படி, ஈரானில் உள்ள பல்வேறு ராணுவ, ஆயுத உற்பத்தி மையங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவை எல்லாம், ஈரானின் எதிர்கால அணு திட்டங்களை தடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரான் அணு ஆயுத உற்பத்திக்காக பதப்படுத்தப்பட்ட யுரேனியம் தயாரித்து முடித்துவிட்டதாகவும், எதிர்காலத்தில் அந்த நாடு பத்தாயிரம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியவையாக இருப்பதால், இஸ்ரேலுக்கே நேரடியான உயிர் அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2024இல், ஈரான் இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகளை வீசிய சம்பவத்தை நினைவூட்டிய நெதன்யாகு, அந்த வெடி பொருட்கள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை என தெரிவித்தார். எனவே, அந்த அச்சுறுத்தலை அடியோடு தடுத்து நிறுத்த இஸ்ரேல் தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், இந்திய தூதரகம் ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்காக முக்கிய அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. தேவையில்லாமல் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம், பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் இந்தியர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை மேலும் தீவிரமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகள் இந்த பதற்றம் குறைய வேண்டுமென்று வேண்டுகோள்கள் வைக்கத் தொடங்கியுள்ளன.