நியூயார்க்: “வரி என்பது அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான வருவாய் ஆதாரமாகும். அதன் மூலம், சர்வதேச அளவில் நாம் அமைதியைப் பேண முடிகிறது. வரிவிதிப்பு பிரச்சினையை மேற்கோள் காட்டி நான் போர்களை நிறுத்தியுள்ளேன். அணு ஆயுதம் ஏந்திய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு மோதலில் ஈடுபட்டன. இதில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த சூழலில் நான் அவர்களிடம் சொன்னதை இங்கே சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் நான் சொன்னது விரும்பிய பலனைப் பெற்றது. அவர்கள் மோதலை நிறுத்திவிட்டார்கள். நிச்சயமாக, அதில் வரிவிதிப்பு மற்றும் வர்த்தகம் உள்ளது, ”என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார். மே 10 முதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர்களை நிறுத்திவிட்டதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி முடிந்தது.
பாகிஸ்தான் தரப்பும் இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களைத் தாக்க முயன்றது. இருப்பினும், இந்திய பாதுகாப்புப் படைகள் அதை இடைமறித்து அழித்தன. அதன் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என்றும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது என்றும் இந்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.