புதுடெல்லி: அமெரிக்க பொருட்கள் மீதான வரி 84 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படும் என சீனா நேற்று அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கான கட்டண விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வாரம் சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போட்டிக் கட்டணமே வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய வரி விதிப்பின் கீழ் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களை நமது சந்தை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

எனவே, அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை தவிர்க்கப்படக் கூடியது என சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா மீது அமெரிக்கா வழக்கத்திற்கு மாறாக அதிக வரிகளை சுமத்துவது நடைமுறை பொருளாதார முக்கியத்துவம் இல்லாத எண்களின் விளையாட்டாக மாறிவிட்டது. வரி எண் விளையாட்டை அமெரிக்கா தொடர்ந்து விளையாடினால், அதை சீனா புறக்கணிக்கும் என்று சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் கட்டுப்பாடற்ற கட்டணங்களால் உலகப் பொருளாதாரக் குழப்பத்திற்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிலும் சீனா புகார் அளித்துள்ளது.