வாஷிங்டன்: ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த நிர்வாகத்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022ம் ஆண்டு டுவிட்டர் என்ற சமூக வலைதளத்தை வாங்கினார். அதன்பிறகு, அதற்கு ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். இதையடுத்து, எக்ஸ் சமூக வலைதளத்தின் சி.இ.ஓ.,வாக லிண்டா யக்காரினோவை, எலான் மஸ்க் நியமனம் செய்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த லிண்டா யக்காரினோ, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது; எக்ஸ்க்கான தனது திட்டம் குறித்து எலான் மஸ்க் என்னுடன் பகிர்ந்தபோது, இந்த சாதாரணமான பணியை நிறைவேற்றுவது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்பு என்று உணர்ந்தேன். கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது, நிறுவனத்தை மீண்டும் உயர்த்துவது மற்றும் அனைவருக்குமான செயலியாக எக்ஸை மாற்றுவதற்கான பொறுப்பை எனக்கு அளித்ததற்கு நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவராக உள்ளேன்.
எக்ஸ் குழுவினருடன் சேர்ந்து செய்த வரலாற்று வணிக மாற்றம் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் உள்பட பயனர் பாதுகாப்பு, விளம்பரதாரர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, கம்யூனிட்டி நோட்ஸ் உள்ளிட்டவை அனைத்தும் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது, இப்போது, எக்ஸ் ஏ.ஐ., உடன் எக்ஸ் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.