நோர்த் கரொலைனா: நோர்த் கரொலைனாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவி, பொல்க் கவுண்டியில் கட்டாய வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் சூறாவளி தாக்கியதில் இருந்து மீண்டு வரும் அந்தப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோர்த் கரொலைனா பொது பாதுகாப்புத் துறை, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:20 மணிக்கு பொல்க் கவுண்டியில் கட்டாய வெளியேற்றத்தை அறிவித்தது. இந்த பகுதி சார்லட்டில் இருந்து சுமார் 80 மைல் (128.7 கிமீ) தொலைவில் உள்ளது. அதிகாரிகள், “இப்போது நீங்கள் வெளியேறவில்லை என்றால், சிக்கிக்கொள்ளலாம், காயமடையலாம் அல்லது உயிரிழக்கலாம்” என எச்சரிக்கை செய்துள்ளனர்.
பகுதியில் தீயால் காட்சியளவு (visibility) குறைந்துள்ளது. மேலும், சாலைகள் மற்றும் வெளியேற்ற வழித்தடங்கள் முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளது. காவல்துறை மக்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வசதி பெறுவதற்காக கொலம்பஸ் நகரில் தற்காலிக முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நோர்த் கரொலைனா வனத்துறை இணையதளப் புள்ளிவிவரங்களின்படி, பொல்க் கவுண்டியில் மூன்று தீவிர காட்டுத் தீகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள பார்க் மற்றும் மேடிசன் கவுண்டிகளில் இரண்டு தீவிர தீகள் வேறாக எரிகின்றன. மேலும், வட எல்லையில் உள்ள ஸ்டோக்ஸ் கவுண்டியிலும் மற்றொரு காட்டுத் தீ பரவி வருகிறது
கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் சூறாவளி, நோர்த் கரொலைனாவின் மேற்குப் பகுதிகளை பெரிதும் தாக்கியது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மாநிலத்தால் பராமரிக்கப்படும் சாலைகளில் 5,000 மைல்கள் (8,046 கிமீ) பாதிக்கப்பட்டன. மேலும், 7,000 தனியார் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சேதமடைந்தன.
இந்த சூறாவளி காரணமாக, டென்னஸி மாநிலத்திற்குச் செல்லும் இண்டர்ஸ்டேட் 40 மார்க்கில் 1.6 கிமீ (ஒரு மைல்) கிழக்கு நோக்கி செல்லும் பாதை முழுமையாக சேதமடைந்தது. அது கடந்த மார்ச் மாதம் வரை பகுதியளவில் மட்டுமே இயக்கத்தில் இருந்தது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர குழுக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொல்க் கவுண்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.