ருத்ரபிரயாக்: நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்… உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோவிலுக்கு சென்றபோது நிலச்சரிவில் சிக்கி மூன்று பக்தர்கள் பலியாகினர்; எட்டு பேர் காயமடைந்தனர்.
உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் உள்ளது. இங்கு ‘சார்தாம்’ என அழைக்கப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கான புனித யாத்திரை கடந்த மே 10ம் தேதி துவங்கியது.
இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று காலை கேதார்நாத் கோவிலுக்கு செல்ல கவுரிகுந்த் மலைப்பாதையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, மலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கிருந்த பெரிய பாறை உருண்டு, கீழே சென்ற பக்தர்கள் மீது விழுந்தது.
இதில், மஹாராஷ்டிராவின் கிஷோர் அருண், 31; சுனில் மஹாதேவ் காலே, 24; உத்தரகண்டைச் சேர்ந்த அனுராக் பிஷிட் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து நிகழ்ந்த பகுதியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எட்டு பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.