உத்தராகண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டேராடூன், தெஹ்ரி, பவுலி, ஹரித்வார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி, டேராடூன், உத்தரகாசி, ருத்ரப்பிரயாக், சமோலி, பாகேஷ்வர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகமுள்ளதாக கூறப்பட்டதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு மற்றும் நீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், வரும் நாட்கள் சவாலானதாக இருக்கும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக மீட்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. மாநில மக்களின் உயிர், சொத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.