கோவை: கோவை செம்மொழி பூங்கா பணிகளை டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். கோவை காந்திபுரம் மத்திய சிறை அருகே ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) காலை ஆய்வு செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 85 சதவீதம் தேர்வு மூலமாகவும், 15 சதவீதம் காலியிடங்கள் நேரடி தேர்வு மூலமாகவும் நிரப்பப்படும்.
கோவை மாநகராட்சியில் 10 நிமிடத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றியதில் சிக்கல் இல்லை. அனைத்து தீர்மானங்களும் பரிசீலிக்கப்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிடம் வரைதல் அனுமதிச் சீட்டுக்கான ஆன்லைன் திட்டத்தால் கட்டண உயர்வு சரியல்ல. அதன் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெட்டிச்செல்வன், மாவட்டச் செயலர்கள் நா. நிகழ்ச்சியில் கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.