தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா நாளையும், நாளை மறுநாளும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. தினமும் இக்கோயிலை பார்க்க வெளி மாவட்டம், மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரிய கோயிலை காண வரும் மக்கள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனால் பெரிய கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறும். அந்தளவிற்கு மக்கள் வருகை காணப்படும். முக்கியமாக பிரதோஷம், சனி பிரதோஷ நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விடும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் வானுயர்ந்து நிற்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சியளிக்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் எப்போதும் எல்லோருக்கும் வியப்பை அளிக்கும் பிரமாண்டம் என்றால் மிகையில்லை.
உலக புகழ்பெற்ற இந்த தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை, அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ராஜராஜ சோழனின், 1040-வது சதய விழா நாளையும், நாளை மறுநாளும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சதய விழாவை முன்னிட்டு, பெரியகோயில் விமானம், மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், கோயில் உள் பிரகாரம், வெளிபிரகாரம், கோயில் மதில்சுவர் என அனைத்து இடங்களிலும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் வெள்ளை நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென்று மின்னுகிறது. ஆற்றுப்பாலம் ரவுண்டானா, பெரிய கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை பல்வேறு பகுதிகளும் மின்னொளியில் ஜொலிக்கிறது.
முக்கிய இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நாளையும், நாளைமறுநாளளும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, பரதநாட்டியம், கவியரங்கம், இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது. மேலும் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மாமன்னன் ராஜராஜன் விருது வழங்குதல், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.