சென்னை: சூர்யா சாரும் நானும் வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்களை வாழ்த்தியது. அதன் மூலம் மக்களின் உண்மையான உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது என்று இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் இயக்குவதால் ஆர்.ஜே.பாலாஜியை சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என்று என்னென்னவோ சொல்லுகிறார்கள்.
ஆனால் பொதுமக்களுக்கு என்னை பற்றி நன்றாகத் தெரியும். படத்தின் ரிலீஸிற்கு முந்தைய நாள், எனக்கே தெரியாமல் ஒரு வீடியோவில் நான் உடைந்து அழுதுவிட்டேன். சூர்யா சாரும் நானும் வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்களை வாழ்த்தியது. அதன் மூலம் மக்களின் உண்மையான உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது.
திரையரங்குகளில் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. இணையத்தில் பகிரப்படும் சில விஷயங்கள் யதார்த்தத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாதது போல் தோன்றுகிறது. நான் மக்களின் அன்பை மட்டும்தான் தேடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.