சென்னை; அபராதம் விதிப்பு… நடிகர் ரவி மோகனின் தோழியாக அறியப்படும் கெனிஷாவுக்கு அவதூறு வழக்கில் துபாய் நீதிமன்றம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரவிமோகன் கருத்து வேறுபாடு காரணமாக தமது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இந்த பிரிவுக்கு ரவி மோகனின் தோழியாகவும், பாடகியாகவும் அறியப்பட்ட கெனிஷாவே காரணம் என்று பேச்சுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் வெளியேறுவதாக கெனிஷா அறிவித்தார்.
இந் நிலையில் அவதூறு வழக்கில் துபாய் நீதிமன்றம் கெனிஷாவுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு;
துபாயில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமக்கு பணம் தரவில்லை என்று சமூக ஊடகங்களில் கெனிஷா பதிவிட்டு இருந்தார். அதை அவரது தோழி அருணாவும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதையறிந்த அந்த நிறுவனம், அவதூறு பரப்புவதாக கெனிஷா, அவரது தோழி அருணா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது கெனிஷாவுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, அவதூறாக செய்தி பரப்பியதாக, ஐக்கிய அரபு அமீரக இணைய குற்றச்சட்டத்தின் கீழ் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கு ரூ.1 லட்சத்து 29,684 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆர்த்தி ரவி மீதான அவதூறு கருத்துகளால் நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளான கெனிஷா, மீண்டும் நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.