புதுடில்லி: கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, மூத்த அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பரத்தை திரும்பப் பெறுமாறு, யு.பி.எஸ்.சி.,க்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, அரசுத் துறைகளின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அனுபவமிக்க சிவில் சர்வீஸ் (ஐஏஎஸ்) அதிகாரிகளை நியமிப்பது வழக்கம்.
இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்பந்த அடிப்படையில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் மட்டத்தில் உள்ள 45 உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி)க்கான விளம்பரத்தை கடந்த 17ம் தேதி வெளியிட்டது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நிபுணர்களை அரசு துறைகளில் சேர்ப்பதே இதன் நோக்கம். ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்டிஏ) எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, இந்த நடைமுறையால், இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல், ஏற்கனவே பணியில் உள்ள எஸ்சி, ஓபிசி அரசுப் பணி அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், “மத்திய அரசின் இந்த முடிவை எங்கள் கட்சி ஆதரிக்காது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்,” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது X சமூக ஊடகப் பக்கத்தில், “மத்திய அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுப்பது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலாகும். அரசியலமைப்பை அழிப்பதும் இடஒதுக்கீட்டை பறிப்பதும் பாஜகவின் ராம் ராஜ்ஜியம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் காரணமாக உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை வாபஸ் பெறுமாறு யுபிஎஸ்சி-யை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
2014க்கு முன், முந்தைய ஆட்சிக் காலத்திலும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாமல், நேரடி நியமனம் மூலம் சில உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தலைவர் மற்றும் பல்வேறு அமைச்சகங்களில் செயலர் நிலை பதவிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டன.
ஆனால், வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதி, குறிப்பாக இடஒதுக்கீடு கோட்பாட்டின் அடிப்படையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.
அதன்படி, இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்ய வேண்டும். எனவே, மூத்த அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்பப் பெறுமாறு யுபிஎஸ்சிக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.