புதுடெல்லி: பூடான் மன்னரின் வருகை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “இன்று புதுடெல்லி வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவரது வருகை இரு நாடுகளுக்கு இடையேயான தனித்துவமான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.
பூட்டான் மன்னரின் இந்தியப் பயணம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய உறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் குறிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூடான் மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் பூடான் மன்னரை சந்திக்க உள்ளனர்.
தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய வழிகளை ஆராய்வது ஆகியவை இந்த சந்திப்புகளின் நோக்கமாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவும் பூடானும் தனித்துவமான மற்றும் முன்மாதிரியான உறவை அனுபவித்து வருவதாக அது குறிப்பிட்டது. பூடான் மன்னரின் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.