குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க 10,000 பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’ சகோதர, சகோதரிகள் பிரக்ஞானந்தா – வைஷாலிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினமான வரும் 26-ம் தேதி டெல்லியில் உள்ள தத் பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இதில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 10,000 பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 1,000 பஞ்சாயத்து தலைவர்கள், 300 பேரிடர் பணியாளர்கள், 300 நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராடும் போராளிகள், 200 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், விவசாய கடன் சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மத்திய அரசின் திட்டப் பயனாளிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். அன்று மாலை ராஷ்டிரபதி பவனில் விருந்து நடைபெறும். இதில் பங்கேற்க உலக செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் சகோதர, சகோதரியான பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், விருது பெற்ற விவசாயிகள் போன்றோரும் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளனர்.