சென்னை: பின்தங்கிய மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட் சேவையை வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மொபைல் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் எளிதாக பாஸ்போர்ட் சேவையை பெறும் வகையில் மொபைல் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான வாகனம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம், பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் அரசு சேவைகள் பொதுமக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பாஸ்போர்ட் சேவைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் வைத்திருப்பதன் அவசியம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கோவை, சேலம் மற்றும் அதை ஒட்டிய ஊரக பகுதிகள் மற்றும் ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மொபைல் பாஸ்போர்ட் சேவை வேன் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது தற்போது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.