சென்னை: சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், மஸ்கட்டில் இருந்து 252 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருவுக்கும், ஹைதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், 152 பயணிகளுடன் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்துக்கும் திருப்பி விடப்பட்டன.
148 பயணிகளுடன் குவைத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உட்பட சில விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, மதுரை, கோயம்புத்தூர், துாத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. தட்பவெட்ப நிலை மாறியதால், வட்டமடித்த விமானங்களும், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் காலை 5.30 மணி முதல் 9 மணி வரை 40க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதும் புறப்படுவதும் 2 முதல் 5 மணி நேரம் தாமதமானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல்: இதனிடையே, ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து 174 பயணிகளுடன் சென்ற லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், சிறப்புப் படையினர் மற்றும் விமானப் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12.16 மணிக்கு விமானம் தரையிறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, இது புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு சோதனை காரணமாக அதிகாலை 2 மணிக்கு ஜெர்மனிக்கு திரும்ப வேண்டிய விமானம் 265 பயணிகளுடன் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது.