இரண்டு வருட ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், நடிகர் அஜித்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்ப்போம். அஜர்பைஜானில் காதல் திருமணம் செய்து கொண்ட அர்ஜுன் (அஜித்) – கயல் (த்ரிஷா) இருவருக்கும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது.
பிரிந்து செல்ல முடிவெடுத்த அர்ஜுன், தன் மனைவியை காரில் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வழியில் கார் எங்கோ பழுதடைகிறது. டெலிவரி டிரக்கில் வரும் ரக்ஷித் (அர்ஜுன்) மற்றும் தீபிகா (ரெஜினா) த்ரிஷாவை அழைத்துச் சென்று அருகிலுள்ள ஓட்டலில் இறக்கிவிட்டு அவர்களுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறார்கள். காரை ரெடி செய்துவிட்டு ஓட்டலுக்குச் செல்லும் அர்ஜுன், மனைவியைக் காணவில்லை என்று அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடுகிறார். இந்தத் தேடலில் அவன் முன் பல முடிச்சுகள் அவிழ்கின்றன.
அவர் மனைவியைக் கண்டுபிடிக்க முடியுமா? இதைப் பற்றியதுதான் ‘விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதை. இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்திற்கான பேட்டிகளில் கூறியது போல், இது வழக்கமான அஜித் படம் இல்லை. ஓரிரு இடங்களைத் தவிர படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லை. இதை ஆரம்பத்திலிருந்தே மனதில் கொள்ள வேண்டும். படத்தின் முதல் காட்சியிலேயே எந்தவித ஆர்ப்பாட்டமும், சலசலப்பும், பில்டப்பும் இல்லாமல் மிக எளிமையாக அறிமுகமாகிறார் அஜித். தனக்கிருந்த இடத்தில் பல படிகள் கீழே இறங்கி வந்து படம் முழுவதும் நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எந்த நேரத்திலும் கைதட்டல்களைப் பெறுவதற்காக பில்டப்களை வற்புறுத்தாததற்காக அவரை மனதாரப் பாராட்டலாம். படத்தின் முதல் பாதி முழுவதும் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படம் எடுக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு எல்லாம் மிகைப்படுத்தாமல் சிறப்பாக உள்ளது. படத்தின் தொடக்கத்தில் காதல் காட்சிகள் தவிர, இடைப்பட்ட திருப்பம் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆரவ் மற்றும் அஜித்துக்கு இடையேயான காட்சிகள், அதைத் தொடர்ந்து அர்ஜுன் மற்றும் ரெஜினாவின் அறிமுகம் மற்றும் அவர்களின் பின்னணி ஆகியவை திரைக்கதையை உருவாக்க உதவுகின்றன.
ஆனால், இரண்டாம் பாதியில்தான் படத்துக்கு சிக்கல். இடைவேளையில் போடப்பட்ட ட்விஸ்ட் இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே உடைந்துவிட்டது. இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்பவர்களை யோசிக்க வைக்கிறது. குறிப்பாக, அஜீத் பணம் எடுக்க வங்கிக்குச் செல்வதும், த்ரிஷாவைத் தேடி மீண்டும் அலைவதும் போன்ற சலிப்பூட்டும் காட்சிகள் திரைக்கதையில் தேங்கி நிற்கின்றன. முதல் பாதியில் ஈர்க்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில் முற்றிலும் இல்லை. இப்படிப்பட்ட த்ரில்லர் கதைக்களத்தில், ஒன்றிரண்டு புத்திசாலித்தனமான காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் திரைக்கதையை அதிகம் யோசிக்காமல் நேர்கோட்டில் சொல்லியிருப்பது ஏமாற்றம். ஒரு நடிகராக அஜித்துக்கு இது ஒரு புதிய பரிமாணம்.
வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல், இதில் நடிக்க அவருக்கு நிறைய இடம் கிடைத்துள்ளது. அதை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். மூன்று விதமான ‘கிளாஸ்’ தோற்றங்களில் கவர்கிறார். த்ரிஷாவின் காட்சிகள் மிகக் குறைவாக இருப்பதால் அவருக்கு அதிக வேலை இல்லை. அர்ஜுன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அஜித்தை வங்கிக்கு அனுப்பி பணம் கொண்டு வரும் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் குறைபாடற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு பெரும் பலம். ஓம் பிரகாஷின் கேமரா அஜர்பைஜானின் தூசி நிறைந்த நிலப்பரப்பை தெளிவாக சித்தரித்துள்ளது.
அனிருத்தின் இசை கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், அஜீத்தும் அர்ஜுனும் மோதும் காட்சிகள் ‘மங்காத்தா’ ரேஞ்சை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான். முதல் பாதியின் பரபரப்பை இரண்டாம் பாதிக்கு எடுத்துச் சென்று அலுப்பூட்டும் காட்சிகளைக் குறைத்திருந்தால், அது ஒரு நேர்த்தியான திரில்லராக இருந்திருக்கும். ஸ்டைலிஷான மேக்கிங்காக இருந்தாலும், கொட்டாவியைத் தூண்டும் ‘ஜவ்வான’ இரண்டாம் பாதி ‘விடாமுயற்சி’யை ஒரு வீண் முயற்சியாக மாற்றிவிட்டது.