தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமான எஸ்எஸ்ஏ (SSA) திட்ட நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்படாது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்குகிறது. இதற்காக, மத்திய அரசின் கல்வி மேம்பாட்டுத் திட்ட விதிகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய அம்சங்களில் ஒன்றான பிஎம்ஸ்ரீ (PM SHRI) பள்ளி திட்டத்தில் சேராத மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் எஸ்எஸ்ஏ நிதி வழங்குவதை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக, 2023-24 கல்வியாண்டுக்கான நான்காவது தவணை நிதியாக ரூ.249 கோடி மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கான ரூ.2,152 கோடி மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசின் மீதான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும்; இல்லையெனில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காததற்கான காரணங்களை விளக்கினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. ஆகவே, மத்திய அரசின் விதிகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் போது, தமிழகம் மட்டும் மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.
முதலில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கையை ஏற்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது. ஆனால் பின்னர் அரசியல் காரணங்களுக்காக இதை மறுக்கிறது. இது தமிழக அரசின் தவறு. இந்த விவகாரத்தில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கான அக்கறை இல்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும், “தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளதால், தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், கன்னடம் போன்ற எந்த ஒரு இந்திய மொழியையாவது சேர்க்க வேண்டும். அதில் என்ன தவறு? உண்மையில், தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழக அரசு மத்திய அரசுடன் சமரசம் செய்து எஸ்எஸ்ஏ நிதியை பெறுமா, அல்லது நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யுமா என்பது எதிர்காலத்தில் தெளிவாகும்.