சென்னை: தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காணப்படும்.
வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை பதிவேடுகளின்படி, அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் தலா 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக பரமத்தியில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.