புதுடெல்லி: பாகேஷ்வர் தாம், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறக்கட்டளை சார்பில் 218 கோடி ரூபாய் செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் கர்ஹாவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:- சில அரசியல் தலைவர்கள் இந்து மதத்தை விமர்சித்து வருகின்றனர். மகா கும்பமேளா உள்ளிட்ட இந்து பண்டிகைகள் மற்றும் இந்து மரபுகள் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அடிமை மனப்பான்மையிலிருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை. அந்த அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். சமூகத்தில் பிரிவினையை தூண்டி ஒற்றுமையை சீர்குலைக்க கடுமையாக முயற்சிக்கின்றனர். அவர்களின் சதியை மக்கள் முறியடிக்க வேண்டும். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த விழா நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மகா கும்பமேளா பற்றி மக்கள் பேசுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
பிரயாக்ராஜில் பக்தி மட்டுமின்றி சமூக சேவையும் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.5 லட்சம் பேருக்கு இலவச மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. 16,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் அல்ல. அவை மக்களுக்கு சேவை செய்யும் புனித தலங்கள். நமது மகான்கள் ஆயுர்வேதத்தையும் யோகாவையும் உலகிற்கு தானமாக வழங்கியுள்ளனர்.
நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழைகளின் துன்பம் எனக்குத் தெரியும். நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களின் நலனுக்காக ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தினேன். நாடு முழுவதும் ஜனக் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மருந்துகள் வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஜனக் மருந்தகங்களில் 15-க்கு கிடைக்கிறது. நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 1,500 டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புற்றுநோய் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புற்றுநோயை தடுக்க புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும். புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் சேவை மையங்கள் திறக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.