டெல்லி: 2025-26 நிதியாண்டுக்குள் நாட்டின் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;- தற்போது நாட்டில் 97 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2025-26 நிதியாண்டுக்குள் நாட்டின் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ரயில்வேக்கு 1500 மெகாவாட் மின்சாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மத்தியப் பிரதேச அரசின் ‘ரேவா அல்ட்ரா மெகா சோலார்’ நிறுவனத்துடன் இன்று கையெழுத்தான 170 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் இதில் ஒரு முக்கியமான படியாகும். 2030-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.