சென்னை: தமிழகத்தில் சுமார் 58 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை தவிர 12690 தனியார் பள்ளிகளும், 1835 சிபிஎஸ்இ பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்த வரையில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வித் துறையின் கீழும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.
மேற்கண்ட பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் மூலம் அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க தற்போது பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மார்ச் மாதம் முதல் தொடங்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல், இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் நோக்கத்தில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால், வரும் 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.