ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற வழக்கறிஞர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பிரபல நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த பான் மசாலாவில் குங்குமப்பூவின் சக்தி இருப்பதாக விளம்பரம் கூறுகிறது.
ஒரு கிலோ குங்குமப்பூ ரூ. 4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால், பான் மசாலா ரூ. 5-க்கு விற்கப்படுகிறது. அதனால், அதில் குங்குமப்பூ கலந்திருக்க வாய்ப்பு குறைவு. தவறான தகவல்களைப் பரப்பி மக்களை ஏமாற்றும் பான் மசாலா நிறுவனம், விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

மனுவை விசாரித்த ஆணையம், பான் மசாலா நிறுவனமான ஜேபி இண்டஸ்ட்ரீஸ் தலைவர் விமல்குமார் அகர்வால் மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. விமல்குமார் அகர்வால் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகி 30 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.