சென்னை: தமிழகத்தில் வெப்பம் வரலாறு காணாத அளவில் உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் வெப்ப அலை 100 டிகிரியை தாண்டியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனிடையே சென்னையில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. பகல் 12 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் அடித்தது. மாலை 4 மணி வரை வெயில் நீடித்தது. இதனால் சென்னை வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக மதியம் அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையில்லாமல் வெளியே செல்ல தயக்கம் காட்டினர்.
வெயிலில் இருந்து தப்பிக்கவும், கடற்கரைக் காற்றைப் பெறவும் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு மக்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கடற்கரை பகுதிகள் மக்கள் கூட்டமாக மாறியது. இந்நிலையில், வரும் நாட்களில் வெப்பச் சலனம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும். வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கலாம். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சற்று குறையலாம். இயல்பிலிருந்து அதிகபட்ச வெப்பநிலையில் வித்தியாசம் இருக்கும். அதே சமயம், தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரியாக இருக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸாகவும் இருக்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.0 டிகிரி செல்சியஸ் பதிவானது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக பெரும்பாலான இடங்களில் இயல்பை நெருங்கியது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.