சென்னை: புதுடெல்லி-சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ரயில் பயனாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த ரயிலை நீட்டிக்க வாய்ப்பில்லை என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக, தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் புதுடெல்லி செல்கின்றனர்.
மேலும், தமிழகத்தில் இருந்து வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதே நேரத்தில் தென் தமிழகத்திற்கு போதிய ரயில் வசதி இல்லை. வட இந்தியாவில் இருந்து கன்னியாகுமரிக்கும், தென் தமிழகத்தில் இருந்து டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்நிலையில் புதுதில்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. ஆனால், இவை சென்னை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதேபோல் திருக்குறள் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரையும், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் மதுரை வரையும் இயக்கப்படுகிறது. இந்த திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இது தவிர புதுதில்லியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த ரயிலை நீட்டித்து இயக்கினால், தென் மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”புதுடெல்லி-சென்னை இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் கன்னியாகுமரி – வடமாநிலங்களுக்கு இடையே புதிய ரயில் சேவைக்கு கோரிக்கை விடுக்கலாம். ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்கும்” என்றார்.