தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 1040 ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னன் இராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் இராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஐப்பசி மாத சதய நாளாகிய சனிக்கிழமை காலை மங்கல இசையுடன் தொடங்கிய இந்த விழாவில், கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனத்தின் 27}ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மேயர் சண். ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மு. ஜோதிலட்சுமி, உதவி ஆணையர் கோ. கவிதா, சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ராஜராஜசோழன் சிலைக்கு 127 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், யானை மீது திருமுறைகளை வைத்து மங்கல இசைக் கருவிகள், சிவ வாத்தியங்கள் முழங்க திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்தது. இதில், ஏராளமான ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடி வந்தனர்.
இதனிடையே, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பால், தயிர், நெய், சந்தனம், மஞ்சள், தேன், விபூதி, சாம்பிராணி தைலம், தைலக்காப்பு, நவகவ்யம், திரவியப் பொடி, வாசனைப் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிற்பகலில் பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.
பின்னர், மாலையில் தேவாரப் பண்ணிசையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருவுடையார், பெரியநாயகி திருவுருவச் செப்புத் திருமேனிகளும், மாமன்னர் இராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி, இராஜேந்திர சோழன் திருமேனிகளும் காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் அளித்த தங்க கிரீடத்துடன் 4 ராஜ வீதிகளில் உலா உள்ளிட்டவை நடைபெற்றன.