
திருப்பதி: பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா, நவ., 28-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அன்னை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் தரிசன வசதிகளுக்கு தேவஸ்தானம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. வாகன சேவைகளில் வெளிநாட்டு நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பூங்காவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி, மலர் கண்காட்சிகளும் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நவ., 28-ல் துவங்கி, 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று மதியம் கோவில் அருகே உள்ள தாமரைத் தடாகத்தில் பத்மாவதி தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் நடந்தது. அதன்பின், சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, இதை எதிர்பார்த்து காத்திருந்த பக்தர்களும் குளத்தில் நீராடி புனித நீராடினர்.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் புனித நீராட திருச்சானூர் வந்திருந்தனர். நேற்று மாலை பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான பக்தர்கள், அறங்காவலர் பி.ஆர்.நாயுடு, நிர்வாக அலுவலர் சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை நிர்வாக அலுவலர் வீரபிரம்மம், அர்ச்சகர்கள், கோயில் உயர் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.