சென்னை: வள்ளலார் என அழைக்கப்படும் இராம லிங்க சுவாமிகள் மிகப்பெரும் ஞானி. வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று மற்றவர் துன்பத்துக்காக வருந்துகின்ற உயர்ந்த பக்குவத்தைக் கொண்டவர்.
அத்தகு ஞானநிலை கொண்ட இராம லிங்க சுவாமிகள் ஒருமுறை வீதியில் விளக் கொன்றை ஏந்தி நின்று, அவ்வீதியில் சென்று வருவோரைப் பார்க்கிறார்.
சுவாமிகள் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் சுவாமிகளிடமே வினவுகின்றனர். சுவாமி! விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு வரையும் பார்க்கிறீர்களே என்ன சங்கதி..? இதற்கு சுவாமிகள் கூறுகிறார்; யாரேனும் மனிதர்கள் போகிறார்களா? என்று பார்க்கிறேன் . மனித உருவில் ஐந்தறிவு படைத்த விலங்குகளே போய்வருகின்றன. ஒரு சில மனிதர்களை மட்டுமே கண்ணுற்றேன் என்றார் சுவாமி.
ஆம், மனிதர்கள் எல்லோரும் மனிதர்கள் அன்று. மனிதன் என்றால் அவன் புனிதனாக இருக்க வேண்டும். புனிதன் என்றால் மற்றவர்களை நேசிக்கின்ற மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகின்ற மற்றவர் துன்பத்தை தன் துன்பம் போல எண்ணுகின்ற பக்குவத்தைக் கொண்டிருப்பதையே அது குறிக்கும்.
ஆம், அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்காஇயன்றது அறம் என்பார் வள்ளுவர். அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும். அவா என்பது புலன்வழிச் செல்லுகின்ற ஆசை. வெகுளியானது கடுஞ்சினத்தைக் குறிப்பதாகும். இன்னாச் சொல் என்பது மற்றவர்களைப் புண்படுத்தும் சொல்.
ஆக, மேற்குறித்த நான்கையும் கடிந்து ஒழுகுவதே அறமாகும். இப்போது வள்ளுவன் கூறுகின்ற அறம் நம்மிடம் உண்டா? என்பதை நாம் ஒவ்வொரு வரும் முடிவு செய்வோமாயின், வள்ளலார் விளக்கை ஏந்தி நின்று மனிதர்கள் யாரேனும் போகிறார்களா என்று பார்த்ததன் பொருள் புரியும்.