சென்னை : குட் பேட் அக்லி-யைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
இதனிடையே தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு, குட் பேட் அக்லி வெளியீட்டை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.