சென்னை: நடிகர் யோகிபாபு அடுத்தக்கட்டமாக ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களில் ஹீரோயின் இருக்கிறார்களோ இல்லையோ காமெடியன்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்ற பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் காலியானது. அந்த வெற்றிடத்தை நிரப்பியது யோகி பாபு.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிரூபித்தார்.
அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டமாக ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாடலை நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.