அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கிடையில் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் முடித்துவிட்டு, அதன்பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் பரவின. இதை பலரும் ஷேர் செய்து அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால், சிம்புவின் அடுத்த படத்தில் மட்டுமே அவர் பணிபுரிவதாக அவரது தரப்பில் கூறப்பட்டது.
தற்போது தனுஷ் படம் குறித்து பலரும் பகிர்ந்து வரும் நிலையில், அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில், “எனது அடுத்த படங்கள் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். இது அன்பான வேண்டுகோள். எனது அடுத்த படங்கள் முடிந்ததும் முதலில் பகிர்வேன். நன்றி” என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.