சென்னை: வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘மட்டன் கிரீன் கறி’ அசைவ ரெசிபி செய்யுங்கள்.
தேவையானவை: மட்டன் – அரை கிலோபெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்சோம்பு – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 5கொத்தமல்லித்தழை – அரை கட்டுதேங்காய்த் துருவல் – 50 கிராம்உப்பு – தேவையான அளவுவினிகர் – ஒரு டீஸ்பூன்கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – 30 மிலி
செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் மட்டனை சேர்த்து வதக்கி, உப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து நன்கு வேகவிடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கலவையை வேகவிடவும். பின்னர் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, குழம்பு தயார் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
மட்டன் கிரீன் கறி சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழம்பு பச்சை நிறத்தில் இருக்கும். அதனால்தான் இந்த டிஷ்ஷுக்கு மட்டன் கிரீன் கறி எனப் பெயர்.