மீன் உணவு ஆரோக்கியமானதோடு சுவையானதாகவும் இருப்பதால் பலர் அதனை விரும்புகிறார்கள். ஆனால் சமைக்கும் போது எழும் வாசனை சிலரை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். அந்த வாசனை வீடு முழுவதும் பரவுவதால், வாந்தி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். எனவே, சமைப்பதற்கு முன் மீனின் வாசனையை நீக்கும் சில யுக்திகளை தெரிந்து கொள்வது அவசியம்.

பாரம்பரியமாக, உப்பு மற்றும் மஞ்சளை மீனில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்த பின் கழுவுவது வழக்கமாகவே பல குடும்பங்களில் நடைமுறையில் உள்ளது. இது கிருமிகள் மற்றும் வாசனையை அகற்ற உதவுகிறது. அதேபோல், எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகரில் 10–15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவும் முறையும் வாசனையை குறைக்கும். இதிலுள்ள ஆசிட் தன்மை வாசனையை நன்கு அகற்றும்.
இன்னொரு வழியாக, கள்ளப்பருப்பு மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக செய்து மீனை கழுவுவது நல்ல பலனளிக்கும். நன்னீர் மற்றும் கடல் நீர் மீன்களுக்குமே இந்த முறை சரியாக வேலை செய்கிறது. கூடுதலாக, பாலில் 20–30 நிமிடங்கள் ஊற வைத்தும் மீன் வாசனையை குறைக்கலாம். பாலில் உள்ள கேசீன், மீனில் உள்ள வாசனை ஏற்படுத்தும் TMA உடன் சேர்ந்து அதை நீக்குகிறது.
சமையலுக்கு முன் இஞ்சி-பூண்டு விழுதை தடவுவதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவை வாசனையை மட்டும் அல்லாமல் கிருமிகள் மீது தாக்கமும் ஏற்படுத்தும். மேலும் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன.
இந்த எளிய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், மீனை சுவையாகவும் வாசனையின்றியும் சமைக்கலாம். மீன் உணவின் முழு சுவையையும் ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க இதுபோன்ற சரியான முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.