புட்டு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இனிப்பு வகையாகும். கம்பு, கேழ்வரகு, அரிசி என பலவகை புட்டுகளில் உளுந்து புட்டு மிகச் சத்தானது. இதில் சேரும் உளுந்து, பெண்களுக்கு சிறப்பான சத்துகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இடுப்பு எலும்பு வலுவடைய இது உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில் உளுந்து உணவாக கொடுப்பது வழக்கமானது, அதேபோல் இந்த புட்டும் நல்ல மாற்று தீர்வாக இருக்கலாம்.இந்த புட்டு செய்வதற்கு முதலில் ஒரு கப் உளுந்தை கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். அது லேசாக நிறம் மாறும் வரை பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அரை கப் பச்சரிசியையும் சேர்த்து அதேபோல் வறுக்க வேண்டும்.
இரண்டும் நன்கு குளிர்ந்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவு பிசைய வேண்டும். இரண்டு சிட்டிகை உப்பும் சேர்க்கவும். மாவு கொழுக்கட்டை போல கெட்டியாக பிடிபட வேண்டும். இதுதான் புட்டு செய்ய ஏற்ற நிலையில் இருப்பதை குறிக்கும்.
இப்போது இந்த மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்த பிறகு, நாட்டுச்சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரையை விருப்பப்படி கலந்து பரிமாறலாம்.இந்த புட்டு ஹெல்த்தியும், சுவையுமானதும் மட்டுமல்லாமல், பெண்களின் எலும்பு வலிமையை கூட அதிகரிக்கக்கூடியது. இன்று செய்த இந்த இனிப்பை உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.