வெயிலில் காலத்தில் கட்டாயம் இந்த உணவுகள் வேண்டாம்…!
சென்னை: கோடை காலம் வந்து விட்டாலே உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்று பார்ப்போம். வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை,மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.
பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை எனவே இவற்றை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.
கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.