இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் மீது கொடூர தாக்குதல்
லண்டன் ; காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐ.ஜே.ஏ.) நடத்திய இந்தியாவின் நுண்ணறிவு திறம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியது, ஆளுங்கட்சிக்கு மாற்றாக உருவாவதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என கூறினார்.
வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சொத்துக்களை குவித்தல், மக்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்துவோம் என அவர் கூறினார். டெல்லி மற்றும் மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் நடந்த வருமான வரி ரெய்டை குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் பல்வேறு குரல்கள் ஒடுக்கப்படுவதற்கான எடுத்துக்காட்டு அது என கூறினார். இது போன்ற விசயங்களே தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்த ஊக்கப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். நமது ஜனநாயக கட்டமைப்புகளின் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனாலேயே இந்த பாதயாத்திரை நடத்த வேண்டிய அவசியம் தனக்கு ஏற்பட்டது என கூறினார். ஊடகங்கள், உட்கட்டமைப்பு மையங்கள், நீதிமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. சேனல்களின் வழியே மக்களின் குரலை கொண்டு சேர்ப்பது என்பது எங்களுக்கு மிகவும் கடினம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என அவர் குற்றச்சாட்டாக கூறினார். பி.பி.சி. தற்போது இதனை கண்டறிந்து உள்ளது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அது நடைபெற்று வருகிறது.
பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் தாக்கப்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர் என ஒவ்வொருவருக்கும் தெரியும். அரசின் கால்களை பற்றி பத்திரிகையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். அது நடைமுறையின் ஒரு பகுதியாகவே ஆகி விட்டது. அதனால், எந்தவொரு வேறுபட்ட விசயங்களையும் நான் எதிர்பார்க்க முடியாது. அரசுக்கு எதிராக எழுதுவது பி.பி.சி.யால் நிறுத்தப்பட்டால், அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என கூறியுள்ளார். அனைத்து வழக்குகளும் மறைந்து விடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்